யாத்ரன் 06
"எனக்கு எதுவுமே புரியல, எனக்கு ஏன் இப்படி ஆகுது?" என மீண்டும் மீண்டும் கேட்ட யாத்ரனின் குரலில் ஏனென்று தெரியாத ஒரு நடுக்கம் வெளிப்பட்டது.
அவனுடைய கரங்கள் ஜான்சியை மேலும் வளைத்து தன்னோடு அணைத்துக்கொள்ள, அவனின் சூடான மூச்சுக்காற்று அவளுடைய கழுத்தில் பட்டு பெண்ணவளை கூசச் செய்தது.
நினைவு தெரிந்த நாளிலிருந்து எந்தவொரு ஆண்மகனின் ஸ்பரிசத்தையும் உணர்ந்திராதவளை இவன் இறுக்கி அணைத்திருக்க, பாவம் அவளும் என்னதான் செய்வாள்!
அந்த அணைப்புக்குள் ஜான்சிக்கு மூச்சு முட்டுவது போலிருக்க, அவளுடைய கரங்கள் அவனை அணைக்கச் செல்வதும் பின் தயங்கி நிற்பதுமாக அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது.
யாத்ரனோ அந்த நொடி பயத்தை தவிர வேறு எதையும் உணரவில்லை.
அந்த அணைப்பு என்னவோ சில கணங்கள்தான். ஆனால் ஆயிரமாயிரம் எண்ணங்களும் உணர்ச்சிகளும் இருவருக்குள்ளும் சுழல, லேசாக நெளிந்தாள் ஜான்சி.
அவள் நெளிந்ததுமே தான் செய்யும் காரியத்தை உணர்ந்த யாத்ரன் சட்டென தலையைத் தூக்கி அவள் முகத்தைப் பார்த்தான்.
பெண்ணவளின் முகம் செவ்வானமாய் சிவந்திருக்க, அவன் விழிகளைப் பார்க்க தயக்கப்பட்டு குனிந்துக்கொண்டாள் அவள்.
இதுவரை வெட்கத்தில் சிவந்த கன்னங்களை பார்த்திராதவனுக்கு இத்தனை நேரமிருந்த பயம் போய் ரசிக்கத் தூண்ட, ஒரு ஆர்வத்தில் அவள் கன்னத்தை பெருவிரலால் மெல்ல வருடினான்.
"வாவ்.." என்று அவனிதழ்கள் முணுமுணுக்க, ஜான்சிக்கு இது என்ன மாதிரியான உணர்வென்றே சொல்லத் தெரியவில்லை.
உடலுக்குள் புது இரத்தம் பாய்ந்தது போல் அவளுடல் புல்லரித்து போயிருக்க, திடீரென இருவரும் எதிர்பார்க்காதது போல, "ஜான்சி..." என்ற அர்ச்சனாவின் குரல் அதிர்ச்சியும் கோபமும் கலந்து ஒலித்தது.
அந்த இடத்தையே அதிர வைத்த அந்த சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர் இருவரும்.
அங்கு தன் தாயை எதிர்பார்க்காத பெண்ணவளுக்கு சர்வமும் அடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
"ம்மா அது..." என்று அவள் சொல்லி முடிக்கவில்லை, மின்னல் வேகத்தில் மகளை நெருங்கியவர் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்திருக்க, யாத்ரனோ அதிர்ந்துவிட்டான்.
"வாட் த ஹெல்...?" என்று கேட்டுக்கொண்டே அவன் ஒரு அடி முன்னே வைக்க, மறுகணம் அவனை கை நீட்டி தடுத்தார் அர்ச்சனா.
"இப்போ இந்த அறைய நான் கொடுக்கலன்னா இவ அப்பாவும் இந்த ஊர் மக்களும் இவள வார்த்தையாலயே கொன்னுருவாங்க. நீங்க கொஞ்சநாள் இந்த ஊரை சுத்தி பார்த்துட்டு போயிருவீங்க, என் மக இருக்க போறது என்னவோ கொஞ்சநாள்தான், இருக்குற வரைக்கும் நிம்மதியா இருக்கணும் அதை கெடுத்துராதீங்க"
என்று கையெடுத்துக் கும்பிட்டவாறு சொல்லி முடித்தவரின் வார்த்தைகளில் அத்தனை வலி பிரதிபலித்தது.
அதை உணர்ந்ததாலோ என்னவோ யாத்ரன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, மகளை இழுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு சென்றார் அர்ச்சனா.
ஆனால், கண்ணிலிருந்து மறையும் வரை இருவரையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்த யாத்ரனுக்கு ஒரு சந்தேகமும் உள்ளுக்குள் எழுந்தது.
'அவ இருக்குற வரைக்கும்னா என்ன அர்த்தம், ஜான்சி எங்க போக போறா?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவனுக்கு பதில்தான் தெரியவில்லை.
ஆனால் அவன் எதிர்பார்க்காத பல அதிர்ச்சிகள் அவனுக்காக காத்திருப்பதை யாத்ரன் அப்போது அறிந்திருக்கவில்லை.
மகளை இழுத்துக்கொண்டு விறுவிறுவென்று வீட்டுக்குள் நுழைந்த அர்ச்சனா சுற்றிமுற்றி பார்த்துவிட்டு கதவைத் தாளிட்டார்.
ஜான்சி தாயின் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. விழிகளிலிருந்து கண்ணீர் ஓட, கைகளைப் பிசைந்த வண்ணம் நின்றிருந்தவளின் எதிரே வந்து நின்றவருக்கும் விழிகள் என்னவோ கலங்கித்தான் இருந்தன.
"அந்த பையன் வேணா இந்த ஊருக்கு புதுசா இருக்கலாம், ஆனா நாம என்ன மாதிரியான சூழல்ல இருக்கோம்னு உனக்கு நல்லாவே தெரியும். அதுவும் நீ.. என்ன நடக்க போகுதுன்னு எல்லாமே தெரிஞ்சும் எப்படி அந்த பையன் கூட நெருங்கி பழகுற ஜான்சி? இது மட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சா.." என்று அர்ச்சனா அவள் தோளைப் பற்றி உலுக்க, வெடித்து அழுதுவிட்டாள் அவள்.
"ம்மா, தயவு செஞ்சு அப்பாக்கிட்ட எதையும் சொல்லிராதீங்க. எனக்கும் அவருக்கும் இடையில சத்தியமா எதுவும் இல்லம்மா, நம்புங்க! என்னை தயவு செஞ்சு மன்னிச்சிருங்க, மறுபடியும் இந்த மாதிரி நடக்காது"
என்று சிறு குழந்தையாய் விம்மி விம்மி அழுதவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு சமையலறை நோக்கி நடந்தவர் சட்டென நின்று மகளை திரும்பிப் பார்த்தார்.
"இன்னைக்கு பௌர்ணமி, என்ன நாள்னு தெரியும்ல" என்று இறுகிய குரலில் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட, வேகமாக சென்று கேலன்டரை பார்த்தவளின் இதழ்கள், "ஷானு..." என்று பரிதாபத்தோடு முணுமுணுத்தன.
நேரம் வேகமாகக் கடந்து சூரிய அஸ்தமனமும் நெருங்க, அந்த ஊரிலுள்ள பெரிய கோயிலில் அலங்காரங்க வேலைப்பாடுகள் வேகமாக நடந்துக்கொண்டிருந்தன.
இரவு நெருங்க நெருங்க வழக்கம் போல் இல்லாமல் மொத்த ஊரும் பரபரப்பாக இருக்க, எதையும் உணராமல் இன்று நடந்ததையே யோசித்தவாறு அமர்ந்திருந்தான் யாத்ரன்.
'ச்சே! இது ஒன்னும் டுபாய் இல்ல யாத்ரா, உன்னால பாவம் அந்த பொண்ணுக்குதான் பிரச்சனை. என்ன அறை!'
என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தவன் வனஜாவும் ருக்மணியும் வரதனோடு குசுகுசுவென்று பேசுவதை விழிகளை கூர்மையாக்கி கவனித்தான்.
"என்னாச்சு?" என்று அவன் புரியாமல் கேட்க, உடனே திரும்பிப் பார்த்த வரதனுக்கு நண்பனை சமாளிப்பதுதான் பெரும்பாடாய் தோன்றியது.
"அது... அது ஒன்னு இல்லடா யாத்ரா, இன்னைக்கு ராத்திரி பூஜை இருக்கு. அதைதான் அம்மாவும் ருக்மணியும் சொல்லிட்டு இருந்தாங்க. வேறொன்னு இல்ல" என்று சமாளிக்க முயற்சித்தான் அவன்.
"ரியலி! இன்னைக்கும் நாம டான்ஸ் பார்க்க போறோமா என்ன?" என்று கேட்ட யாத்ரனின் வார்த்தைகளில் ஆர்வம் உச்சத்திலிருக்க, வனஜாவோ அப்பட்டமாக பதற ஆரம்பித்துவிட்டார்.
"தம்பி.. அது.. அது இல்ல தம்பி.. இது.." என்று திணறிய தாயின் கரத்தைப் பற்றி அழுத்தம் கொடுத்த வரதன், "இந்த பூஜைக்கு ஆம்பிளைங்க போகக் கூடாதுடா, ஒன்லி லேடீஸ். என்ட் நாம மூவிஸ் பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல்ல இன்னைக்கு வேணா நல்ல படமா பார்க்கலாம்" என திசைத்திருப்ப முயற்சித்தான்.
ஆனால், யாத்ரனோ இதை விடுவதாக இல்லை.
"அது ஏன் பொண்ணுங்க மட்டும், பசங்க பார்த்தா என்னாகும்?" என்று மீண்டும் அவன் தன் கேள்வியைத் தொடுக்க, மற்றவனுக்கு அய்யோ என்று இருந்தது.
"குறுக்க குறுக்க கேள்வி கேக்குறது ஈஸி, பதில் சொல்றது ரொம்ப கஷ்டம். சும்மா பேசிட்டு இருக்காம சீக்கிரம் வா, சாப்பிட்டு படத்த பார்க்கலாம்" என தப்பித்தால் போதுமென்பது போல கழிவறைக்குள் நுழைந்துக்கொண்டான் வரதன்.
ஆனால், வழக்கத்தை மீறி யாத்ரனின் மனம் ஏதோ ஒன்று சரியில்லை என்று மட்டும் அடித்துக் கூறியது.
அதே யோசனையோடு அவன் அறைக்குள் நுழைந்துக்கொள்ள, இருவரும் லேப்டாப்பில் திரைப்படமொன்றை பார்த்துவிட்டு உறங்கவே கிட்டத்தட்ட மணி பன்னிரெண்டை தொட்டு விட்டது.
யாத்ரனும் வரதனும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருக்க, மெல்ல கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்த வனஜாவோ மகளிடம் சைகையால் சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார்.
கோயிலில் ஏற்றியிருந்த தீபங்களின் வெளிச்சம் அந்த இரவின் இருளை கிழித்துக்கொண்டு கிராமத்தை சூழ்ந்திருக்க, எல்லா மக்களும் தத்தமது வீட்டிலிருந்து வெளியேறி கோயிலை நோக்கிச் சென்றனர்.
வழக்கமாக இருக்கும் நிசப்தம் போய் கிசுகிசுக்களும் ஒரு சிலரின் வேதனையுடனான ஓலமும் கேட்க, தாயோடு கோயிலை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த ஜான்சியின் மனம் கனத்துப் போயிருந்தது.
கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்த கோயிலில் ஏற்றியிருந்த தீபத்தை பார்த்தவளின் கால்கள் ஒருவித பயத்தில் அப்படியே நின்றுவிட, மகள் சட்டென சிலை போல் நின்றதை பார்த்ததும் அவள் கரத்தில் அழுத்தம் கொடுத்தார் அர்ச்சனா.
"ஷானு பாவம்ல!" என்றவளின் குரல் தழுதழுக்க, அழுகை தொண்டையை அடைத்தது.
ஆனால் பாவம், பரிதாபப்படுபவர்களே அந்த மூட நம்பிக்கையில் மூழ்கியிருந்தால் கடவுளாலுமே தடுக்க முடியாதுதானே!
அதேநேரம் மனம் பிசைய தூக்கம் கலைந்து பட்டென கண்களைத் திறந்தான் யாத்ரன்.
வேகமாக எழுந்தமர்ந்தவன், அலைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்துவிட்டு எரிச்சலாக விழிகளை சுழற்றினான்.
"ஓ ஷீட்! இன்னும் ஒரு மணி கூட ஆகல, அதுக்குள்ள எழுந்துட்டேன்.என்னாச்சு எனக்கு, ஏன் உள்ளுக்குள்ள ஒரு மாதிரியா இருக்கு?"
நெற்றியை நீவி விட்டவாறு யோசித்தவனின் புருவங்கள் கண்ணாடி ஜன்னல் வழியே தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்ததும் கேள்வியில் முடிச்சிட்டன.
அவனுடைய கால்கள் தானாக நகர்ந்து அந்த ஜன்னலுக்கு அருகே செல்ல, கதவைத் திறந்து வெளியே பார்த்தவனின் விழிகள் இப்போது சந்தேகத்தில் சுருங்கின.
"என்ன நடக்குது இங்க? அதுவும் இந்த நேரத்துல.." புரியாமல் முணுமுணுத்தன அவனுடைய இதழ்கள்.
கோயிலை நோக்கிச் செல்லும் ஊர் மக்களையும் கோயில் இருக்கும் பக்கத்திலிருந்து வரும் தீபங்களின் வெளிச்சத்தையும் மனதில் எழுந்த பல கேள்விகளோடு பார்த்திருந்தவன் பின் ஒரு முடிவோடு வீட்டிலிருந்து வெளியேறினான்.
எல்லா மக்களும் கோயிலுக்குள் நடக்கும் சடங்குகளில் மூழ்கியிருக்க, யார் கண்ணிலும் சிக்காமல் கோயிலுக்கு வெளியே மறைந்திருந்து உள்ளே நடப்பதை பார்க்க முயற்சித்தான் யாத்ரன்.
ஆனால், கூடியிருந்த மக்களால் உள்ளே நடப்பது எதுவும் அவனுக்கு சரியாகத் தெரியவில்லை.
கோபத்தில் காலை தரையில் உதைத்தவன் இடுப்பில் கைக்குற்றி அடுத்து என்ன செய்வதென்ற யோசனையோடு நின்றிருக்க, அவனே எதிர்பார்க்காமல் கோயிலிலிருந்து வெளியே வந்தனர் சிலர்.
அரக்குநிற தாவணியில் முகத்தை மறைத்த வண்ணம் ஒரு பெண் நடுவில் வர அவளுக்கு பின்னால் நான்கைந்து பூசாரிகள் அந்த பெண்ணின் குடும்பம் உறவுகள் என கூட்டமாக ஒரு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
அந்த கூட்டத்தில் ஜான்சியும் அழுத வண்ணமாய் நடந்துச் செல்ல, விடையறியாத குழப்பத்தோடு நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த யாத்ரனும் யார் கண்ணிலும் படாமல் மறைந்தவாறே சென்றான்.
ஒருசில நிமிடங்களில் மொத்த கூட்டமும் அந்த கோயிலுக்கு பக்கத்திலிருந்த பெரிய கிணற்றுக்கு அருகே செல்ல, ஆடவனுக்கோ உள்ளுக்குள் ஆர்வம் எழுந்தது.
அதற்குப் போட்டியாக பல கேள்விகளும் அடுக்கடுக்காய் எழுந்தன.
'வாட் த ஹெல் இஸ் கொன்ன ஹேப்பனிங் ஹியர், அந்த பொண்ண என்ன பண்ண போறாங்க.. அவ.. அவ ஏன் அந்த கிணத்துக்குள்ள இறங்குறா.. ஏன்.. ஏன்..'
அவன் தனக்குத்தானே கேள்விகளை தொடுத்துக்கொண்டிருக்கும் அதேவேளை தொப்பென்று நீருக்குள் ஏதோ விழும் சத்தம்.
அங்கிருந்த ஒரு பெரியவர் தலையில் அடித்துக்கொண்டு கதறியழ, மற்ற பெண்களோ அவரைப் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தனர்.
என்ன நடந்திருக்குமென்று மூளைக்கு உரைத்தாலும் அதை ஏற்க மறுத்தவனுக்கு நடந்ததை புரிந்துக்கொள்ளவே சில நிமிடங்கள் எடுத்தன.
"அந்த.. அந்த பொண்ணு... அவளுக்கு..." என்று திக்கித்திணறி கேட்டவன் அதிர்ச்சியின் உச்சகட்டத்தில் விக்கித்துப் போய் நின்றிருந்தான்.
ஆனால் அந்த திகைப்பு என்னவோ ஒருசில கணங்கள்தான்.
அவனுடைய கோபம் தலைக்கேற, நெற்றி நரம்புகள் புடைத்தன.
கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு ஒரு அடி முன்னே வைத்தவனின் வாயை பின்னாலிருந்து பொத்தி இழுத்துக்கொண்டு சென்றது ஒரு அரவம்.
யாத்ரனோ முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த அரவத்தின் பிடியில் திமிற, அதுவோ அவனுக்கு ஈடாக உடும்புப் பிடியாய் பிடித்திருந்தது.
எப்படியோ ஒரு மறைவான இடத்திற்கு வந்ததும் அந்த அரவம் தன் பிடியை தளர்த்த, மறுகணம் திரும்பிப் பார்த்தவனுக்கு விழிகள் பெரிதாய் விரிந்து பின் அனலைக் கக்கின.
*********
யாவும் நின் யாத்ரனாய்.. EPISODE 07
https://agnitamilnovels.blogspot.com/2026/03/07.html
என்னோட வேல்விழி மொழிகள் நாவல இப்போ Papr space தளத்துல நீங்க வாசிக்கலாம்..
ஆத்ரேயன் வர்ஷா Pair யாருக்கெல்லை நியாபகம் இருக்கு... பக்கா ஆன்டி ஹீரோ நாவல்..
காதலென்ற போர்வையில் அவளுக்கு துரோகத்தை செய்பவன் பிடிக்காத அவளுடனான திருமணத்தில் மேலும் அவளை காயப்படுத்துகிறான்..
அவளுடைய காதலை உணருவானா அவன்?
காதல், காமம், நகைச்சுவை, துரோகம், வலி, உறவு, பிரிவு என கலந்த நாவலே வேல்விழி மொழிகள்
வேல்விழி மொழிகள்
by Sheha zaki
Read on Papr
https://papr.space/article/699e9023f529ce39d2764e62?ref=social&src=whatsapp
விழி தீயிலொரு தவம் கதை ஆடியோ நாவலா என்னோட யூடியூப் சேனல்ல இருக்கு கேட்டுட்டு மறக்காம கமென்ட் பண்ணுங்க..
Channel name - kadhaikulla polaama
channel link 👇
https://youtube.com/@kadhaikullapolaama7612?si=BwNNnPMl514OHY2Y
-Sheha zaki

Comments
Post a Comment