விழிகள் 18
தூக்கத்திலிருந்து அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்து தன் முன்னே இருந்தவளை யாழ்மொழி பதற்றமாகப் பார்க்க, தோழியை தாவி அணைத்துக்கொண்டாள் இந்திரா.
"யாழ், என.. எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. இது கனவா நினைவா என்று கூட தெரியவில்லை" என்று அவள் படபடவென பேசிக்கொண்டே போக, ஏற்கனவே தூக்கக் கலக்கத்தில் இருந்தவளுக்கு அவள் பேசுவதை கிரகிக்கவே சற்று நேரம் எடுத்தது.
"இளவரசி, என்ன கூறுகிறீர்கள்? எனக்கு எதுவுமே புரியவில்லை" என்று விழிகளை கசக்கியவாறு யாழ் கேட்க, "வீராவை ஆங்கிலேயர்கள் விடுதலை செய்து விட்டார்களாம், அரண்மனை காவலாளிகள் பேசிக்கொள்வதைக் கேட்டேன். இதுவரை கைது செய்த எவரையும் விட்டதில்லை, முதல் தடவையாக வீராவை விட்டிருக்கிறார்கள் என்றால் எல்லாம் அந்த கடவுளுக்குதான் நன்றி கூற வேண்டும்" என்ற இந்திராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
அவளுடைய சந்தோஷம் விழிகளிலுள்ள கண்ணீரிலும் இதழில் குடிகொண்டுள்ள புன்னகையிலும் அப்பட்டமாகத் தெரிய, மற்றவளுக்கு உச்சகட்ட ஆச்சரியம்.
"என்ன.. நிஜமாகவா? என்னால் நம்பவே முடியவில்லை இளவரசி" என்ற யாழ்மொழியின் குரல் குறையாத அதிர்ச்சியோடு வெளிப்பட, "ஆமாம் யாழ், எனக்கும் அதே ஆச்சரியம்தான். எனக்கு இப்போதே வீராவைப் பார்க்க மனம் துடிக்கிறது. இன்று தயாராக இரு, சந்தைக்கு செல்லலாம்" என்ற இந்திரா மீண்டும் அவளை சந்தோஷத்தில் அணைத்துவிட்டு அரண்மனையை நோக்கிச் சென்றாள்.
ஆனால், அசையாது அதே இடத்தில் அமர்ந்திருந்தவளுக்கு அந்த ஒருவனின் முகம்தான் மனக்கண் முன் தோன்றி மறைய, "எனக்கும் தங்களை காண வேண்டும் அதிகாரி" என்றவளின் இதழ்கள் தானாக புன்னகையில் விரிந்துக்கொண்டன.
அன்று மதிய வேளை, இந்திராவோடு யாழ்மொழியும் சந்தைக்கு செல்ல, இரு பெண்களின் விழிகளும் தன்னவர்களை தேடி அலைபாய்ந்தன.
"அதோ.. வீராவின் தோழன். வா அவரிடம் சென்று கேட்கலாம்" என்ற இந்திரா யாழ்மொழியின் கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு சென்று பாலாவின் முன்னே நிற்க, குனிந்து அழுகிய காய்கறிகளை ஒதுக்கிக்கொண்டிருந்தவன் அரவம் உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்தான்.
மறுகணம் இளவரசி இந்திராவைப் பார்த்ததும் அவனுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிய, "வீரா..." என்று மட்டும் சொன்னவள் கைகளைப் பிசைந்தவாறு தயக்கத்தோடு பார்த்தாள்.
ஆனால், அவளின் மனதைப் படித்தவன் போல், "வீராவ பார்க்கணுமா இளவரசி, வாங்க நானே உங்கள அவன் குடிசைக்கு கூட்டிட்டு போறேன்" என்று பணிவும் பதற்றமும் கலந்து பேசிவிட்டு முன்னே செல்ல, இரு பெண்களும் அவன் பின்னாலேயே சென்றனர்.
நெருங்கி கட்டப்பட்டிருந்த குடிசைகளுக்கு நடுவே அவர்களை அழைத்துச் சென்றவன், "உள்ளதான் இருக்கான், வாங்க" என்றுகொண்டு ஒரு குடிசைக்குள் நுழைய, உறங்கிக்கொண்டிருந்த வீராவின் பக்கத்தில் அமர்ந்திருந்த அவனின் தாய் வைதேகியோ இந்திரசேனாவை பார்த்ததும் பதற்றமாக எழுந்து நின்றார்.
"இளவரசி நீங்களா..." என்றவருடைய குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, இதழில் விரலை வைத்து சத்தம் போடாதே என்பது போல் சைகை செய்தவள் மெல்ல வீராவின் அருகே சென்று அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.
இதைப் பார்த்த வைதேகிக்கு கிட்டத்தட்ட மயக்கமே வந்துவிட, விழி விரித்து அவர் பாலாவை பார்க்க, அவனோ தலையை சொரிந்தவாறு அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்.
யாழ்மொழியும் அவர்களின் தனிமை கருதி குடிசையிலிருந்து வெளியேற, அதற்குமேல் பெரியவர் அங்கு நிற்பாரா என்ன!
பக்கத்திலிருந்த விசிறியை எடுத்து அவனுக்கு அவள் விசிறிவிட, புருவ முடிச்சுகளோடு மெல்ல விழிகளைத் திறந்தவனோ பக்கத்திலிருந்த தன்னவளைப் பார்த்துவிட்டு பதறியபடி எழ முயன்றான்.
"வேண்டாம் வீரா, எதற்கு இந்த பதட்டம்?" என்று அவள் அவனைப் பிடித்து மீண்டும் படுக்கையில் சரிக்க, "இந்திரா நீ எப்படி இங்க.. இது மட்டும் யாருக்காச்சு தெரிஞ்சதுன்னா உனக்குதான் பிரச்சனையாகும்" என்றான் வீரா பதற்றமாக.
"இது போன்ற ஒரு குடிசையில் வைத்து எனக்கு முத்தமிடும் போது தெரியவில்லையா என்ன?" என்று இரு புருவங்களை ஏற்றி இறக்கி அவள் பதிலுக்குக் கேட்க, திருதிருவென விழித்தவனிடத்தில் அதற்கான பதிலே இல்லை.
அப்போதுதான் அவனின் உடலிலிருந்த காயங்கள் அவள் விழிகளுக்குத் தெரிய, "மிகவும் வலிக்கின்றதா?" என்று கேட்டுக்கொண்டே அவனின் மேனியை இந்திரா மெல்ல வருட, இப்போது வலியையும் தாண்டி அவனுடைய உடல் உணர்ச்சிகளால் சூடேறியது.
தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த விழிகளை அழுந்த மூடித் திறந்தவன், "இப்போ இல்ல" என்று தன்னவளையே ரசித்த வண்ணம் சொல்ல, அவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவளுக்கு முகம் குப்பென்று சிவந்தது.
தன்னவளின் விரல்களோடு தன் விரல்களை கோர்த்தவன், அவளை தன்னை நோக்கி இழுக்க, அவன் மேல் சரிந்து அவன் மார்பில் கரத்தை வைத்திருந்தவளோ அவனை அதிர்ந்துப் பார்த்தாள்.
அவனோ அவளிள் இதழ்களைப் பார்த்து, "என்னோட மருந்தே நீதான் இந்திரா, உனக்கு ஆட்சேபனை இல்லன்னா..." என்று குறும்பாக இழுக்க, அடுத்து கொஞ்சம் கூட யோசிக்காமல் அவனின் இதழை சிறை செய்தவள் அவனின் காயங்களுக்கு முழு மருந்தாகவே மாறிப் போனாள்.
வீராவும் அவளின் பின்னந்தலையைப் பற்றி தன்னோடு அழுத்த, உணர்ச்சிகளின் பிடியில் அவனின் மார்பில் பதிந்திருந்த அவளுடைய கரங்களோ நகத்தால் அவனிடத்தில் காதல் தடையங்களைப் பதித்தது.
இருவரும் ஒருவரையொருவர் பிரிய மனமின்றி இதழை சுவைத்துக்கொண்டே போக, அப்போதுதான் லியோ இறுதியாக சொன்ன வார்த்தைகள் அவனுக்கு சட்டென ஞாபகத்திற்கு வந்தன.
பட்டென்று விழிகளைத் திறந்த வீரா உடனே இந்திராவை தன்னிடமிருந்து விலக்கி எழுந்தமர, "என்ன நடந்தது வீரா, என்ன யோசனை?" என்று பதற்றமாகக் கேட்டாள் அவள்.
"இல்ல... அந்த உயரதிகாரி என்னை சிறையிலிருந்து வெளியில அனுப்புறப்போ ஒன்னு சொன்னான். அது உள்ளுக்குள்ளயே சுத்திட்டு இருக்கு இந்திரா" என்று வீரா சொல்ல, இந்திரசேனாவோ கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
"எல்லாமே யாழ்மொழிக்காகதான்னு அழுத்தம் திருத்தமா சொன்னான். இதுல எனக்கு என்ன சந்தேகம்னா யாழுக்கும் அந்த ஆங்கிலேய அதிகாரிக்கும் என்ன சம்பந்தம்? இதை பத்தி உனக்கு ஏதாச்சும் தெரியுமா?" என்று அவன் யோசனையோடுக் கேட்க, அவனின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கும் அதே அதிர்ச்சிதான்.
"என்ன... அந்த அதிகாரி யாழ்மொழிக்காக தங்களை விடுவித்தானா? அது.. அது எப்படி? சத்தியமாக இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது வீரா. இதுவரை ஆங்கிலேயர்களைப் பற்றி அவள் என்னிடம் பேசியது கூட இல்லை" என்று பதற்றமாக சொன்ன இந்திரசேனாவுக்கு தன் தோழி தன்னிடம் எதையாவது மறைக்கின்றாளா என்ற சந்தேகம் உள்ளுக்குள் எழ, வீராவுக்கும் எதுவுமே புரியவில்லை.
"இதை பத்தி யாழ்கிட்ட பேசு, ஏதாச்சும் தெரியலாம். ஆமா... யாழ்மொழி கூடதானே வந்த, அவ எங்க?" என்று வீரா வாசலை எட்டிப் பார்த்தவாறுக் கேட்க, இங்கு யாழோ லியோ இருக்கின்றானா என சந்தையில் தேடி அலைந்துக்கொண்டிருந்தவள் வரி வசுலிக்க வந்த ஜேம்ஸைப் பார்த்ததும் அவனை நோக்கி ஓடினாள்.
திடுதிப்பென தன்னெதிரே மூச்சு வாங்கியவாறு வந்து நின்றவளை அவன் மிரட்சியோடுப் பார்க்க, "அதிகாரி எங்கே, அவரை நான் சந்திக்க வேண்டும்" என்றவள் அவன் பின்னே ஆர்வமாகத் தேடினாள்.
அவள் எதைத் தேடுகிறாள் என்பதை உணர்ந்தவனின் இதழ்கள் மெல்ல புன்னகைக்க, "ஹீ இஸ் நொட் ஹியர்" என்று சொல்லிக்கொண்டே சைகையால் அவர் இல்லை என்பது போல காண்பித்தான்.
அதைப் புரிந்துக்கொண்டவள், "ஓ... அப்படியா! நாளைக்கு அவரை சந்திக்க காட்டுக்கு பக்கத்திலிருக்கும் குளத்திற்கு அருகே நான் காத்திருப்பேன் என்ற தகவலை தெரியப்படுத்த முடியுமா?" என்று ஆர்வமாகக் கேட்க, ஜேம்ஸிற்கு அவளின் மொழி கொஞ்சமும் புரியவில்லை.
"சாரி.. ஐ டோன்ட் அன்டர்ஸ்டேன்ட்" என்று ஜேம்ஸ் சொல்ல, அவனின் முகபாவனையை வைத்து அவனுக்குப் புரியவில்லை என்பதை உணர்ந்து கொண்டவள், நெற்றியை நீவி விட்டவாறு தன்னை சுற்றி ஒருதரம் பார்த்தாள்.
அப்போதுதான் அவளுடைய விழிகளில் ஒரு சிறுபெண் வெள்ளை சுண்ணாம்புக் கல்லால் தரையில் வரைந்துக்கொண்டிருப்பது தென்பட, உடனே ஓடிச்சென்று அதையெடுத்தவள் தன் முந்தானையில் ஒரு சிறு துண்டைக் கிழித்த அதில் வரைய ஆரம்பித்தாள்.
ஜேம்ஸ்ஸோ அவளின் செயலை சிறு அதிர்ச்சியோடும் புரியாமலும் பார்த்துக்கொண்டு நிற்க, புன்னகையோடு அதை நீட்டியவள், "இதை அவரிடம் கொடுத்தால் போதும், அவரே புரிந்துக்கொள்வார்" என்று சொல்ல, அதை வாங்கிப் பார்த்தவனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று சுத்தமாகப் புரியவில்லை.
புரியாமல் விழித்தவாறு ஜேம்ஸ் அங்கிருந்து நகர்ந்துச் செல்ல, "யாழ், என்ன செய்துக்கொண்டு இருக்கிறாய்?" என்ற இந்திரசேனாவின் குரலில் பதற்றமாகத் திரும்பிப் பார்த்தாள் மற்றவள்.
"இளவரசி..." என்று அழைத்த யாழ்ழொழிக்கு இந்திராவின் எதிர்பார்க்காத வருகையில் உள்ளுக்குள் பக்கென்று இருந்தாலும் முயன்று முகபாவனையை மாற்றி புன்னகைக்க, "முன்னே செல்..." என்று அழுத்தமாக சொல்லிவிட்டு பின்னால் நடந்தாள் இந்திரா.
இருவரும் பின் வழியாக அரண்மனைக்குள் நுழைய, தன் அறைக்கு செல்லப் போன யாழின் கரத்தை பற்றி நிறுத்தினாள் இந்திரா.
"நீ என்னிடம் எதையாவது மறைக்கின்றாயா?" என்று கூரிய பார்வையோடு அவள் கேட்க, "இல்.. இல்லை இளவரசி, ஏன் இந்த கேள்வி?" என்று தடுமாற்றத்தோடு கேட்ட யாழ்மொழிக்கு இந்திராவிடம் மறைப்பதை நினைத்து குற்றவுணர்ச்சி இல்லாமல் இல்லை.
"ஒன்றும் இல்லை" என்று யோசனையோடு சொல்லிவிட்டு இந்திரசேனா அங்கிருந்து சென்றுவிட, 'ஊஃப்ப்...' என பெருமூச்சு விட்டுக்கொண்டவள் தான் செல்ல வேண்டிய திசையை நோக்கித் திரும்ப, அவளெதிரே முறைத்தவாறு நின்றிருந்தாள் ராதா.
அவளைப் பார்த்ததுமே யாழ்மொழியின் முகம் மலர, "ராதா..." என்று அழைத்துக்கொண்டு அவள் அருகில் செல்ல, "உன் உயிருக்கு உயிரான இளவரசியிடமே மறைக்கின்றாயே யாழ், இது தவறில்லையா என்ன! ஒருவேளை தெரிந்தால் அவர்களே உன்னை அரண்மனையை விட்டு வெளியில் துரத்திவிடுவார்கள் என்ற பயமா?" என்று நக்கல் தோனியில் கேட்டாள் ராதா.
அவளின் வார்த்தைகளைக் கேட்டு சட்டென நின்றவள், "என் மீதுள்ள கோபம் இன்னும் குறையவில்லையா? அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் நான், காதலித்ததா தவறு? சொல்லப்போனால் நான் காதலிப்பது கூட அதிகாரிக்கு தெரியாது" என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல, ஏளனமாக வளைந்தன ராதாவின் இதழ்கள்.
"தெரிந்தால் உன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியத்தான் போகிறான். அந்த ஆங்கிலேயர்களே அப்படிப்பட்டவர்கள் தான். உன் வாழ்க்கையை நீயே நாசமாக்கப் போகிறாய்" என்று கோபத்தில் பொரிந்துக்கொண்டே போனவள், "ஒருவேளை... ஒருவேளை இதை குறித்து அரசர் கேட்டால் நான் எதையும் மறைக்கப் போவதில்லை, ஞாபகம் வைத்துக் கொள்" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
போகும் தன் தோழியை மிரட்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தன் காதலின் விளைவு தெரிந்தாலும் வேறு வழித் தெரியவில்லை.
மனதில் தன்னவனாக நினைத்துவிட்டாள். அவள் பழகிய முதல் ஆண்மகனும் அவனே.. அவள் உணர்ந்த முதல் காதலும் அவனே..
அப்படி இருக்கையில் இப்போது மறந்து விட வேண்டும் என்றால் அந்த பெண்ணவளால் எப்படி முடியும்?
அன்றைய நாள் முழுக்க அவள் யோசனையில் கடக்க, இங்கு வேலைகளை முடித்துவிட்டு அரண்மனைக்கு வந்த ஜேம்ஸ் லியோவின் ஆஃபீஸ் அறைக்குள் நுழைய, அவனோ வேலையில் மூழ்கியிருந்தான்.
"சார், டெக்ஸ் கலெக்ட் பண்ணியாச்சு. ஆனா சில பேரால கொடுக்க முடியல. நாளைக்கு ஒருநாள் டைம் கொடுத்திருக்கேன், அப்போவும் கொடுக்கலன்னா அர்ரெஸ்ட் பண்ணிடுவோம்" என்று அவன் சொல்லிக்கொண்டே போக, விழிகளை நிமிர்த்தி அவனை ஒரு பார்வைப் பார்த்த லியோ, "கொடுக்க முடியலன்னா விடு, அர்ரெஸ்ட் எல்லாம் எதுக்கு? அதுவும் இந்த விஷயத்துக்கு. ஜஸ்ட் லீவ் தட்" என்றான் சாதாரணமாக.
அவன் சொன்னதைக் கேட்டவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
"சார்..." என்று அதிர்ச்சி குறையாத குரலில் அழைத்தவன், "நீங்கதானே வரி கட்டுறது ரொம்ப இம்பார்டென்ட், கொடுக்கலன்னா அர்ரெஸ்ட் பண்ண சொன்னீங்க. இப்போ வரைக்கும் அதைதான் பண்ணிக்கிட்டு இருக்கோம். இப்போ திடீர்னு..." என்று புரியாமல் கேள்வியாக இழுக்க, ஒரு பெருமூச்சோடு கையிலிருந்த ஃபைலை மேசையில் தூக்கிப் போட்டவன், "இப்போ வேணாம்னு சொல்றேன். டூ வாட் ஐ சே" என்றான் அழுத்தமாக.
தலைகால் புரியாமல் எல்லா பக்கமும் தலையாட்டியவன் பின்னரே ஞாபகம் வந்தவனாக உடனே பாக்கெட்டிலிருந்த சிறு முந்தானையின் துண்டை அவனிடம் நீட்ட, அவனை கேள்வியாகப் பார்த்தான் லியோ.
"பேளஸ்ல இருக்குற அந்த பொண்ணு கொடுத்துச்சு சார்" என்று அடக்கப்பட்ட சிரிப்போடு சொல்லி அதை மேசையில் வைத்துவிட்டு செல்ல, வேகமாக அதையெடுத்துப் பார்த்த லியோவின் இதழ்கள் மென்மையாகப் புன்னகைத்தன.
அந்த சிறு துணியில் யாழ் வரைந்திருந்த குளமும் சூரியன் உச்சியிலிருப்பது போலான காட்சியையும் சிரிப்போடு பார்த்தவனின் இதழ்கள், "ரெண்டு ட்ரோயிங்ல எங்க எப்போ வரணும்னு மொத்தத்தையும் சொல்லியிருக்கா" என்று தன்னவளை நினைத்து முணுமுணுக்க, அவனையும் மீறி அவளைக் காண எதிர்பார்த்துக் காத்திருந்தான் லியோ.
அடுத்தநாள்,
சூரியன் உச்சியிலிருக்கும் பகல் வேளையில் அந்த குளக்கரையில் தன்னவனுக்காக காத்திருந்து யாழ் அமர்ந்திருக்க, லியோவோ வந்தபாடில்லை.
'நான் இத்தனை தூரம் எதிர்பார்த்திருக்க கூடாது, என் தவறுதான். சாதாரண பணிப்பெண் என் பேச்சைக் கேட்டு அத்தனை பெரிய உயரதிகாரி வருவாரா என்ன!' என்று தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டவள் விழிகளிலிருந்து கசிந்த கண்ணீரைத் துடைத்தவாறு எழப் போக, "ஹ்ர்ம் ஹ்ர்ம்.. எனக்காக ரொம்ப நேரமா காத்திருக்கியோ.." என்ற லியோவின் குரலில் பின்னாலிருந்து கேட்டது.
உடனே திரும்பிப் பார்த்தவளின் முகமும் விழிகளும் சந்தோஷத்தில் மின்ன, அவனோ அவளை விட்டு சற்று தள்ளி அமர்ந்துக்கொண்டான்.
ஆனால் யாழ்மொழியின் பார்வையோ அவனை விட்டு விலகவே இல்லை.
புன்னகையோடு அவனையே அவள் பார்த்துக்கொண்டிருக்க, "ஸ்டாப் இட்! என்னையே எதுக்கு இப்படி வெறிச்சு பார்த்துட்டு இருக்க இடியட்" என்று கத்தினான் லியோ.
அதில் நடப்புக்கு வந்தவள், "ஹிஹிஹி... எனக்காக நான் சொன்னதற்காக இங்கு தாங்கள் வந்திருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது அதிகாரி. தாங்கள் எனக்கு பெரிய உதவி செய்திருக்கிறீர்கள், எத்தனை ஆயிரம் கோடி வருடம் நான் சேவை செய்தாலும் தாங்கள் செய்த உதவிக்கு ஈடாகாது" என்று சந்தோஷமும் தயக்கமும் விழிகளில் கண்ணீரோடும் பேசி முடிக்க, அலட்சியமாக தோளைக் குலுக்கினான் அவன்.
"லுக், நான் ஒன்னும் உனக்காக பண்ணல. அவன் என்கிட்ட மன்னிப்பு கேட்டு கெஞ்சினான் அதான் விட்டேன். என்ட் வன் மோர் திங் நீ வரைஞ்சிருந்த ரெண்டு பொம்மை படத்தை வச்சு ஒன்னும் நான் இங்க வரல. ஆஃபீசர் ஒருத்தர மீட் பண்ணணும். இங்க பக்கத்துல தான். அதான் வந்தேன். புரிஞ்சதா?" என்று மீசையில் மண் ஒட்டாத கதையாக அவன் பேசிக்கொண்டே போக, பாதி புரிந்தும் புரியாமலும் பாவமாக தலையாட்டி வைத்தாள் யாழ்மொழி.
அப்போதுதான் குளத்திற்கு அந்த புறமாக நீராடிக்கொண்டிருந்த அன்னங்கள் தென்பட, அதிலிருந்த இரு அன்னங்களைப் பார்த்த யாழ்மொழியின் விழிகள் சட்டென கலங்க இதழ்கள் புன்னகைத்தன.
*************
என்னோட மற்ற கதைகளை படிக்க 👇 (kobo app)
India link >>
Usa link >>>
'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>
India link 👇
https://www.amazon.in/dp/B0FLYRBNZG
Usa link 👇
https://www.amazon.com/dp/B0FLYRBNZG
என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>
INDIA link👇
https://www.amazon.in/dp/B0FL2S9LYC
USA link 👇
https://www.amazon.com/dp/B0FL2S9LYC
Comments
Post a Comment