விழிகள் 16
அடுத்தநாள்,
தனதறையில் குறுக்கும் நெடுக்குமாய் பதற்றமாக நடந்துக்கொண்டிருந்தாள் யாழ்மொழி.
'இரவு முழுக்க கொஞ்சமும் உறக்கமில்லை. ஒருவேளை வீரா சென்றிருப்பானா, அவருக்கு ஏதாவது... அய்யோ கடவுளே! நினைக்கும் போதே மனம் பதறுகிறதே' என்று தனக்குள் புலம்பியவாறு இருந்தவளுக்கு இப்போதே சந்தைக்கு செல்ல வேண்டுமென்று மனம் துடித்தது.
இப்போதே செல்லலாம் என வெளியில் செல்ல தயாராக சென்றவளின் முன் வந்து நின்ற தோழி ஒருத்தி, "இளவரசி இந்திரசேனாவை அமைச்சரவைக்கு அழைப்பதாக தகவல் சொல்ல வேண்டும். எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது யாழ், முடிந்தால் நீ சென்று அவர்களிடம் தகவலை சொல்வாயா?" என்று கெஞ்சலாகக் கேட்க, அவளால் மறுக்க முடியவில்லை.
"ம்ம்.." என்றுவிட்டு உடனே இந்திராவை அரண்மனை முழுக்க தேடி அலைந்தவள், கடைசியாக தோட்டத்து பக்கம் செல்ல, அங்கிருக்கும் பெரிய ஊஞ்சலில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தாள் அவள்.
"இளவரசி..." என்ற யாழ்மொழியின் பதற்றமான குரலில் விருட்டென நிமிர்ந்துப் பார்த்தவள், அவளை கேள்வியாக நோக்க, "என்ன யோசனை இளவரசி?" என்று எதற்கென்று அறிந்தே கேட்டாள் யாழ்மொழி.
"எனக்கு வேறு யாரைப் பற்றி யோசனை இருக்கப் போகிறது யாழ், வீராவைப் பற்றிய கவலைதான். அரண்மனையிலிருந்து வெளியில் செல்லவும் முடியவில்லை, நான் காதலிப்பதைப் பற்றி தெரிந்து கொண்டதலிருந்து தந்தையின் கவனம் முழுக்க என் மீதுதான்" என்று தழுதழுத்த குரலில் அவள் சொல்ல, அவளின் நிலையைப் பற்றி யாழ் அறியாமலில்லை.
"இளவரசி, தாங்கள் இப்படி வீராவைப் பற்றி யோசித்துக்கொண்டு இருப்பதில் எந்த பயனுமில்லை. சந்தைக்கு சென்றால் எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்து விடப் போகிறது" என்று யாழ் சொல்ல, தோழியை ஆர்வமாகப் பார்த்தாள் இந்திரா.
"எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்வாயா? வீரா பாதுகாப்பாக இருக்கிறானா இல்லையா என்று மட்டும் எனக்கு தெரிந்தால் போதும். முடியாது என்று மட்டும் சொல்லி விடாதே" என்று அவள் விழிகளை சுருக்கிக் கேட்க, யாழ்மொழிக்கும் உள்ளுக்குள் தன்னவன் பற்றிய அதே ஏக்கம் அல்லவா!
"தாங்கள் கேட்டு முடியாது என்று மறுக்கவா போகிறேன் இளவரசி" என்று வரவழைக்கப்பட்ட புன்னகையோடு சொன்னவள், "தங்களை அமைச்சரவைக்கு அழைப்பதாக தகவல் வந்திருக்கிறது" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
இந்திராவோ கேள்வியாக புருவத்தை நெறித்தவள், தன் தந்தையை தேடிச் செல்ல, யாழ்மொழியோ அரண்மனையிலிருந்து வெளியேறி சந்தைக்குச் சென்றாள்.
இவள் சந்தைக்குள் நுழையும் போதே அங்கு பரபரப்பாக இருக்க, சில மக்கள் கூட்டத்திற்கு நடுவே தரையில் அமர்ந்து நெஞ்சில் அடித்து அழுதுக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.
"போச்சு போச்சு... எல்லா போச்சு... என் ஒரே புள்ளய பறி கொடுத்துட்டேனே, அவன் உயிரோட இருக்கானா செத்துட்டானான்னு கூட தெரியலயே! அப்போவே இதெல்லாம் வேணாம்னு தலையார அடிச்சுக்கிட்டேனே, என் பேச்ச மதிக்காம இவனுங்களுக்காக போய் அவன் அனுபவிக்கிறான். ஆனா அவங்கள எதிர்த்து என் புள்ளய கூட்டிட்டு வர ஒருத்தனும் முன் வரல"
என்ற அவரின் கதறலை புரியாமல் பார்த்தவாறு நின்றுக்கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் வீராவின் தோழன் பாலா கண்ணில் சிக்க, அவன் முன்னே சென்று நின்றாள்.
அரவம் உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்தவனோ யாழ்மொழியை புரியாமல் பார்க்க, "வீராவுக்கு என்ன நேர்ந்தது?" என்று தீர்க்கமான பார்வையோடுக் கேட்டாள் அவள்.
"அது... நேத்து ராத்திரி அந்த உயரதிகாரிய கொல்ல போறேன்னு போனவன் இன்னும் வீடு திரும்பல, அரண்மனைக்கு பக்கத்துல வேல பாக்குற நம்ம ஆளுங்க வீராவ சுட்டுக் கொன்னதா சொல்றாங்க. அந்த வெள்ளகாரனுங்கள எதிர்த்து நிக்கவும் பயமா இருக்கு. இது நடக்குதுன்னு ஒன்னுமே புரியல"
என்று அவன் நண்பனை இழந்த வலியோடு சொல்லிக்கொண்டே போக, யாழ்மொழிக்கு லியோவுக்கு எதுவும் ஆகவில்லை என்ற நிம்மதியை விட இப்போது வீராவைப் பற்றிய செய்தி இதயத்தை சுக்கு நூறாக உடைத்தது.
இதயம் படுவேகமாகத் துடிக்க, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஒரு குடிசைக்கு அருகே சென்று நின்றவளுக்கு விழிகளிலிருந்து கண்ணீர் விடாமல் ஓடியது.
"இதை என்னாலயே தாங்க முடியவில்லை என்றால் இளவரசி எப்படி தாங்கிக் கொள்வார்கள்?" என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டவள், ஒரு ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டு கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மீண்டும் அரண்மனையை நோக்கிச் சென்றாள்.
அதேநேரம் தன் தந்தையை சந்திக்கச் சென்ற இந்திராவுக்கு தந்தையின் பாரா முகம் மனதைப் பிசைந்தது.
"தந்தையே, இதுவரை அமைச்சரவைக்கு என்னை அழைத்ததே கிடையாது. இன்று என்ன புதிதாக என்னை..." என்று அவள் கேள்வியோடு இழுக்க, "என் பதவியிலிருந்து நான் விலக முடிவு செய்திருக்கிறேன். எனக்குப் பிறகு இந்த அரசாட்சி உனக்கும் உன்னை மணக்கப் போகும் ஆடவனுக்கும் உரியது. இப்போது புரிந்திருக்குமே!" என்றார் வேந்தன் அழுத்தமாக.
அதைக் கேட்ட இந்திராவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.
"நா.. நான் காதலித்தது ஒரு குற்றமா என்ன! நான் மணக்கப் போகும் ஆடவன் என் விருப்பமாக இருக்கக் கூடாதா?" என்று அவள் ஏக்கத்தோடுக் கேட்க, "தாராளமாக இருக்கலாம். ஆனால் அவனும் ஒரு அரச பரம்பரையை சேர்ந்தவனாக இருக்க வேண்டும். அவ்வளவே!" என்ற வேந்தனின் வார்த்தைகளில் அவளின் முகமோ இருண்டுப் போனது.
அவளின் முகப்பாவனையை வைத்தே அவளின் மனதை அறிந்துக்கொண்டவருக்கு இதழ்கள் ஏளனமாக புன்னகைக்க, "உன் முகமே உன் காதலனைப் பற்றி சொல்லாமல் சொல்கிறது. யார் அவன்?" என்று கேட்க, அவளோ உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு தரையைப் பார்த்திருந்தாளே தவிர எதுவும் பேசவில்லை.
"யாரெனத் தெரிந்தால் நான் கொன்றுவிடுவேன் என்ற பயமோ! இதற்குமேல் ஒரு வார்த்தைப் பேசாதே, ஆட்சியை பொறுப்பெடுக்க தயாராக இரு! இந்த நாட்டின் அரசனாக அவன் உன்னை மணக்கட்டும்" என்று அழுத்தமாக சொன்னவர் அங்கிருந்து நகர்ந்திருக்க, போகும் தன் தந்தையை விழிகளில் நீரோடு பார்த்தவள் கனத்த மனதோடு தனது அறைக்குத் திரும்பினாள்.
இவள் அறைக்குள் நுழையும் போதே அங்கு இவளுக்காக காத்திருப்பது போல் நின்றிருந்தாள் யாழ்மொழி.
"யாழ், அதற்குள் வந்துவிட்டாயா?" என்று ஆச்சரியக் குரலில் கேட்டவள், வேகமாக தோழியின் அருகே நெருங்கி "சந்தைக்கு சென்றாய் அல்லவா! வீராவை சந்தித்தாயா, அவன் நலம்தானே? எந்த பிரச்சனையும் இல்லையே, சொல்!" என்று பதற்றம் பயம் கலந்த குரலில் கேட்க, எச்சிலை விழுங்கிக்கொண்டாள் மற்றவள்.
"நான் பயத்தில் இறந்தே விடுவேன் போல, எதற்காக அமைதியாக இருக்கிறாய்? சீக்கிரம் கூறு யாழ்" என்ற இந்திராவின் குரலில் பயம் அப்பட்டமாகத் தெரிய, விழிகளை அழுந்து மூடித் திறந்தவள், "இளவரசி..." என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.
அவளோ தோழியின் பதிலை ஆர்வமாகப் பார்த்திருக்க, "நேற்றிரவு வீரா..." என்று ஆரம்பித்தவள் நடந்ததையும் கேள்விப்பட்டதையும் சொல்லி முடிக்க, ஒருகணம் தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் கூட வந்தது இந்திராவுக்கு.
விழிகளிலிருந்து கடகடவென கண்ணீர் அருவியாய் கொட்ட, உறைந்துப் போய் நின்றிருந்தவளுக்கு மூச்சு விடக் கூட சிரமமாகத்தான் இருந்தது.
"வீ.. வீரா! இல்லை அவனுக்கு எதுவும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்பே இல்லை. நான் நம்ப மாட்டேன். அவன் என்னவன், அவனில்லாத வாழ்க்கையை நான் எப்படி? அய்யோ கடவுளே... என் வீராவை என்னிடமே கொடுத்துவிடு!" என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் விழுந்தவள் தலையில் அடித்துக்கொண்டு கதறியழ, யாழ்மொழியும் அழுத வண்ணமாக இந்திராவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஒரு மூச்சு அழுது தீர்த்தவள், "நான் நம்ப மாட்டேன் யாழ், என் வீராவுக்கு எதுவும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை, என் உள்மனம் அவன் இல்லை என்பதையே ஏற்க மறுக்கிறது. நிச்சயமாக ஆங்கிலேய சிறைச்சாலையில்தான் அவன் உயிருடன் இருக்க வேண்டும். யாரிடம் சென்று எப்படி உதவி கேட்பது என்று கூட எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்வேன், கடவுளே..." என்று தலையைத் தாங்கிக்கொண்டு பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருக்க, அதேநேரம் "ஆஆ..." என்று வலியில் கதறிக்கொண்டிருந்தான் வீரா.
இந்திரா நினைத்தது போல் உயிரோடுதான் இருந்தான் அவன், ஆனால் ஒவ்வொரு நிமிடமும் ஆங்கிலேய கொடுமையால் வலியை அனுபவித்துக்கொண்டு.
அந்த ஆங்கிலேய சிறைச்சாலையில் தலை கீழாக தொங்கவிடப்பட்டு அவன் கிடக்க, வில்லியமோ கையிலிருந்த சவுக்கால் அவனை அடித்து துன்புறுத்திக்கொண்டிருந்தான்.
இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்தவாறு லியோ இருக்கையில் கால் மேல் கால் போட்டவாறு அமர்ந்திருக்க, ஏற்கனவே தோளில் புல்லட் இறங்கிய வலியோடு சேர்த்து சவுக்கு அடியும் வீராவின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சுக்கொண்டிருந்தது.
"ஹவ் டேர் யூ! என்னையே கொல்ல என் இடத்துக்கு வந்திருக்கான். இவனுக்கு கொடுக்குற வலியில வேற எந்த அடிமையும் இங்க வரக் கூடாது" என்று லியோ உச்சகட்ட கோபத்தில் பற்களைக் கடிக்க, "என்னை அடிச்சு கொன்னாலும் பரவாயில்ல, உங்களுக்கு பயப்படுவேன்னு நினைச்சீங்களாடா? ஆங்கிலேயர் ஒழிக! ஆங்கிலேயர் ஒழிக!" என்று வலியை பொறுத்துக்கொண்டு அந்த நிலையிலும் கத்தினான் வீரா.
வில்லியமோ அவன் கத்த கத்த அதற்கு மேல் சவுக்கால் மேலும் அடித்து துன்புறுத்த, அவனின் விழிகளில் இல்லாத பயத்தை ஆச்சரியத்தோடு பார்த்தான் லியோ.
"வில்லியம் ஸ்டாப்!" என்று கத்தியவன் வீராவை கூர்மையாக பார்த்தபடி அவனருகே சென்று நிற்க, வலியால் அரை மயக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்தான் அவன்.
"இன்ட்ரஸ்ட்டிங்! உன் தைரியத்த பார்க்கும் போது எனக்கே ஆச்சரியமா இருக்கு. உனக்கு ஒரு ஆஃபர்.. ஐ மீன் வாய்ப்பு கொடுக்குறேன். என்னை கொல்ல வந்தது தப்புதான்னு ஒத்துக்கிட்டு ஒரு மன்னிப்பு கேளு, விட்டுடுறேன்" என்று லியோ சொல்ல, "சார்..." என்று கத்தினான் வில்லியம்.
"ஐ நோ வாட் ஐ அம் டூயிங்" என்று அழுத்தமாக சொன்னவன், மீண்டும் வீராவின் புறம் திரும்பி "மன்னிப்பு கேளு!" என்று சொல்ல, அவனோ ஏளனமாகப் புன்னகைத்தான்.
"மன்னிப்பா.. உங்ககிட்ட நானா! ஹாஹாஹா... அதுக்கு என்னை அடிச்சு கொல்லுங்க. சிரிச்சுட்டே செத்து போவேன்" என்று வீரா சொன்ன விதத்தில் லியோவுக்கு கோபம் தலைக்கேறினாலும் ஒருபக்கம் அதிர்ச்சியாக இருந்தது.
"எல்லாரும் பேளாஸுக்கு போங்க, இவனுக்கு சாப்பாடு தண்ணீன்னு எதுவுமே கொடுக்க கூடாது" என்று அவனை கட்டி தொங்க விட்டிருந்த கயிற்றை அறுத்துவிட்டு லியோ அங்கிருந்து சென்றிருக்க, தரையில் விழுந்தவன் மீண்டும் சுயநினைவை இழந்து அப்படியே விழிகளை மூடிக்கொண்டான்.
அன்றிரவு,
அறை ஜன்னல் வழியே நிலவை வலி நிறைந்த பார்வையோடு வெறித்திருந்த யாழ்மொழிக்கு இந்திராவின் கதறல்தான் மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வந்துக்கொண்டிருந்தது.
'இளவரசி சொன்னது போல் வீரா உயிரோடு இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை எப்படி தெரிந்துக்கொள்வது? எப்படியாவது இளவரசிக்காக வீராவை காப்பாற்றியாக வேண்டும்'
என்று தீவிர யோசனையில் இருந்தவளுக்கு திடீரென லியோவின் முகம்தான் மனக்கண் முன் விம்பமாக தோன்றி மறைந்தது.
'அதிகாரியா...' என்று தனக்குள் அதிர்ச்சியாக கேட்டுக்கொண்டவளுக்கு லியோவை தவிர வேறு வழியே இல்லை என்று மட்டும் தோன்றியது.
அடுத்தநாள் அவனை சந்திப்பதைப் பற்றி யோசித்துக்கொண்டே உறக்கத்தை தழுவியவள் காலையில் வெகு விரைவாகவே எழுந்திருக்க, ராதாவோ தோழியை கண்டும் காணாதது போல் தன் வேலையில் கவனமாக இருந்தாள்.
அவளின் பாரா முகத்தை முகத்தை பார்த்த யாழ்மொழிக்கு மனம் வலியில் துடித்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக தன் வேலைகளை முடித்துவிட்டு அரண்மனையிலிருந்து வெளியேறினாள்.
அதிகமாக லியோவை சந்திக்கும் சந்தைக்கு பக்கத்திலுள்ள வயலுக்கு சென்றவள் அந்த காலை வெயிலில் அவனுக்காகக் காத்திருந்து நின்றுக்கொண்டிருக்க, அவனோ வந்தபாடில்லை.
போவோரும் வருவோரும் அவளையே ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு செல்ல, கிட்டத்தட்ட ஒருமணி நேரமாக நின்றுக்கொண்டிருந்தவளுக்கு இதற்குமேல் அவன் வருவான் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
'ஒருவேளை இன்று அவர் வர மாட்டாரோ, இங்கேயே நின்று நேரத்தை வீணாக்கியதுதான் மிச்சம், நேரம் கடக்கக் கடக்க எங்கு வீராவுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயம் வேறு என்னை வாட்டி எடுக்கிறதே!'
என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள் தளர்ந்த நடையாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல, பின்னால் கார் ஹார்ன் சத்தம் விடாமல் கேட்டது.
வேகமாக திரும்பிப் பார்த்தவள் அவளை மோதுவது போல் வந்து நின்ற காரைப் பார்த்து வழக்கத்திற்கு மாறாக சந்தோஷத்தில் புன்னகைக்க, கார் ஜன்னல் வழியே அவளை எட்டிப் பார்த்த லியோவிற்கு திகைப்பாக இருந்தது.
"எப்போவும் பயப்படுவ, இன்னைக்கு என்ன அதிசயமா சிரிக்குற" என்று கேட்டுக்கொண்டே அவன் காரிலிருந்து இறங்க, "தங்களை காணத்தான் ஒரு மணி நேரமாக காத்துக்கொண்டிருந்தேன்" என்றவளை பார்த்தவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
"எனக்காகவா! வாட் அ சர்ப்ரைஸ் யாழ், சரி என்ன விஷயம்?" என்று அவன் காரில் ஒற்றைக் காலை மடக்கியவாறுக் கேட்க, "வேறு எங்கேயாவது சென்று பேசலாமா அதிகாரி" என சுற்றி முற்றி சங்கடத்தோடு பார்த்தவாறு சொன்னாள் அவள்.
அவனும் அலட்சியமாக தோளைக் குலுக்கியவன் அவளுக்காக கார் கதவைத் திறக்க, கைகளைப் பிசைந்தவாறு அதிலேறி யாழ்மொழி அமர்ந்ததும் அந்த இடத்திலிருந்து மின்னல் வேகத்தில் காரை செலுத்தினான் லியோ.
யாழ்மொழி எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்க, அவளின் பாவனைகளை அவன் கவனிக்காமலில்லை.
ஆனால் எதுவும் பேசாமல் அமைதியாக காரை செலுத்தியவன் அந்த ஆற்றுக்கு பக்கத்தில் காரை கொண்டு சென்று நிறுத்த, காரிலிருந்து இறங்கி படிகளில் சென்று அவள் அமர்ந்ததும் காரில் சாய்ந்து நின்றுக்கொண்டான் லியோ.
**********
என்னோட மற்ற கதைகளை படிக்க 👇 (kobo app)
India link >>
Usa link >>>
'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>
India link 👇
https://www.amazon.in/dp/B0FLYRBNZG
Usa link 👇
https://www.amazon.com/dp/B0FLYRBNZG
என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>
INDIA link👇
https://www.amazon.in/dp/B0FL2S9LYC
USA link 👇
https://www.amazon.com/dp/B0FL2S9LYC
Comments
Post a Comment