விழிகள் 14




அந்த கடற்கரை மணலில் குதிரை நின்றதும் லியோ இறங்கிக்கொள்ள, யாழ்மொழியும் இறங்கிக்கொண்டாள்.


"இங்க யாருமே இல்ல, நான் உன்னை என்ன வேணா பண்ணலாம். அப்படியே யாராவது இருந்தாலும் என்னை கேள்வி கேக்கவே முடியாது. எந்த தைரியத்துல என்னை நம்பி வந்த?" என்று அவன் கழுகுப்பார்வையோடுக் கேட்க, அவளோ புன்னகையோடு பார்த்தாள்.


"அன்றிரவு தனியாக தங்களிடம் நான் சிக்கிக்கொண்ட போது கூட தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம், அன்று என்னை கடத்திய போதும் என்னை காப்பாற்றாமல் அவர்களின் ஆசைக்கு துணை சென்றிருக்கலாம். ஆனால், விளைவை அறிந்தும் என்னை காப்பாற்றினீர்கள். அப்போதே அனைத்தும் புரிந்துவிட்டது" என்ற யாழின் வார்த்தைகளைக் கேட்டவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.


பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டு அவளையே லியோ பார்த்துக்கொண்டிருக்க, யாழ்மொழியும் இமை மூடாமல் அவனைதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.


அத்தனை ரம்மியமான பொழுது அது. ஓசையோடு பாய்ந்து வரும் கடலலைகளின் நீர்த்துளிகள் மேனியில் பட்டுத் தெறிக்க, உடனே தன் பார்வையைத் திருப்பிக்கொண்டவள், "அது... தங்களின் மனதைக் கவர்ந்தவர்கள் யாராவது உண்டா? அதாவது தாங்கள் யாரையாவது காதல்..." என்று ஒரு பக்கம் ஆர்வம் இன்னொரு புறம் தயக்கத்தோடு கேட்டுவிட்டாள்.


விழிகளை சுருக்கி அவளைப் பார்த்தவன், "காதலா... நெவர்! அது என் வாழ்க்கையில இருந்து எப்போவோ போயிருச்சு" என்று சொல்ல, "தாங்கள் சொல்வதைப் பார்த்தால் யாரையோ காதலித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. யார் அவள்? ஏன்... ஏன் இந்த பிரிவு?" மனதில் காரணமே இல்லாமல் எழுந்த பொறாமையை மறைத்துக்கொண்டு கேட்டாள் அவள்.


"தட்ஸ் நொன் ஆஃப் யூவர் பிஸ்னஸ்" என்று லியோ ஒற்றை விரலை நீட்டி அழுத்தமாக சொல்ல, அவனைப் புருவ முடிச்சுகளோடு பார்த்தவளுக்கு அவன் சொன்னது சுத்தமாகப் புரியவில்லை. 


அவளின் பார்வையிலேயே அதைப் புரிந்துக்கொண்டவன், "ஓ காட்! உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னே எனக்கு தெரியல" என்று கடுப்பாக சொல்லிவிட்டு, "என்னோட தனிப்பட்ட வாழ்க்கை உனக்கு தேவையே இல்லாதது" என்று முறைத்தவாறு சொல்ல, அலட்சியமாக தோளைக் குலுக்கினாள் யாழ்மொழி.


"பரவாயில்லை அதிகாரி, என்னிடம் எப்போது சொல்ல தோன்றுகிறதோ அப்போது சொல்லுங்கள். ஆனால், இப்போது யார் மீதும் எந்த பிரியமும் இல்லை அப்படிதானே?" என்று மனதிற்குள் எழுந்த ஆர்வத்தோடுக் கேட்க, சலிப்பாக விழிகளை உருட்டினான் லியோ.


"இதுவரை தங்களைத் தவிர எந்த ஆண்மகனின் ஸ்பரிசத்தையும் நான் உணர்ந்தது கிடையாது. அரண்மனையிலேயே கூட்டுக்குள் இருக்கும் கிளி போல வளர்ந்துவிட்டேன். இதுவரை யாரையும் காதலித்ததில்லை, பார்க்கலாம். என் ராஜகுமாரன் எங்கு இருக்கிறானோ, எப்போது வருவானோ?" என்று ஓரக்கண்ணால் அவனையே பார்த்தவாறு அடக்கப்பட்ட புன்னகையோடு அவள் சொல்ல, அவனோ அவளின் வார்த்தைகளை காதிலும் வாங்கவில்லை.


"நேரமாச்சு, என் கார் இருந்த இடத்துலயே என்னை கொண்டு போய் இறக்கி விடு!" என்று அவன் சொல்ல, "அவ்வளவுதானா?" என்று உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அவனைப் பார்த்தவளுக்கு வேறு வழியும் தெரியவில்லை.


அவள் குதிரையில் ஏறியதும் அவனும் ஏறிக்கொள்ள, இருவரும் மீண்டும் அவனுடைய கார் நின்ற இடத்தை நோக்கிச் சென்றனர்.


இவர்கள் காருக்கு அருகே வர, அங்கு காரில் சாய்ந்தவாறு நின்றுக்கொண்டிருந்த ஜேம்ஸோ தன்னை நோக்கி குதிரையில் வரும் உயரதிகாரியை அதிர்ந்துப் பார்க்க, அவனோ முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டவில்லை.


லியோவோ குதிரையிலிருந்து இறங்கி, "ஜேம்ஸ், எப்போ வந்த? ஆஸ் யூஷுவல் கார் நின்னுருச்சு. என்னன்னு பாரு" என்று சாதாரணமாக சொல்லிக்கொண்டு காரில் சென்று அமர்ந்துக்கொள்ள, நாவால் இதழை ஈரமாக்கியவாறு திருதிருவென விழித்தவாறு குதிரையில் அமர்ந்திருந்த யாழ்மொழிக்கு அவனின் செயலில் சப்பென்று இருந்தது.


"அதிகாரி, இன்றைய நாள் வீணாகிவிட்டது. ஆனால் நாளை இவ்வாறு நடக்காது. நாளையும் இதே இடத்தில் சந்திக்கலாம், தங்களுக்காக இடங்களை கேட்டு அறிந்துக்கொண்டு வருகிறேன்" என்று யாழ்மொழி கத்திச் சொல்ல, ஜேம்ஸ்ஸோ இருவரையும் மாறி மாறி அதிர்ச்சியாகப் பார்த்தான்.


விழிகளை மட்டும் உயர்த்தி முன்னே இருந்த பெரிய கண்ணாடி வழியே தன்னவளைப் பார்த்துவிட்டு மீண்டும் ஜேம்ஸ் காருக்குள் வைத்திருந்த காகிதங்களை எதுவுமே தெரியாதது போல் பார்வையிட ஆரம்பித்தான் லியோ.


அன்றிரவு, யாழ்மொழி லியோவைப் பற்றி யோசித்தவாறு ஆடைகளை மடித்து வைக்க, அவளை முறைத்துப் பார்த்தவாறு அவளோடு இணைந்து வேலை சேய்துக்கொண்டிருந்தாள் ராதா.


"ராதா, பாவம் அவர்! ஊரை சுற்றிக் காண்பிக்க சொல்லி கேட்டார் ஆனால் அரண்மனைக்குள்ளேயே இருந்த எனக்கு அவரை அழைத்துச் செல்ல ஒரு இடம் கூட தெரியவில்லை. உனக்கு நம் தேசத்திலேயே சுற்றிக் காண்பிக்க ஏதாவது இடங்கள் தெரியுமா?" என்று யாழ்மொழி கேட்க, மற்றவளுக்கு பிபி உச்சகட்டத்தில் எகிறியது.


"அப்போது நீ அந்த வெள்ளையனைப் பார்க்க வெளியில் சென்றிருக்கிறாய், குதிரையில் அவனோடு ஊரில் திரிந்திருக்கிறாய் அப்படிதானே!" என்று பத்தாவது முறையாக மீண்டும் அதே கேள்வியை ராதா கோபமாகக் கேட்க, தன் தோழியின் கோபத்தை புரியாமல் பார்த்தாள் மற்றவள்.


"நான் அரண்மனைக்கு வந்ததுமே அனைத்தையும் கூறிவிட்டேன், மீண்டும் மீண்டும் அதையே கேட்டுக்கொண்டிருக்கிறாய். இப்போது என்னதான் நேர்ந்து விட்டது ராதா?" என்று யாழ் சாதாரணமாகக் கேட்க, "என்ன... என்ன கேட்கிறாய்! என்ன நேர்ந்து விட்டதென்று அலட்சியமாகக் கேட்கிறாயா? எதுவும் உனக்கு நேர்ந்து விடக் கூடாதென்றுதான் இத்தனை கோபப்படுகிறேன். முட்டாள்! காதல் உன் கண்களை பறித்துவிட்டதா? இது தவறு யாழ்!" என்று படபடவென பொரிந்துக்கொண்டே போனாள் அவளின் தோழி.


யாழ்மொழியோ அவளை அதிர்ச்சியாகப் பார்த்தவள், "காதலா? அப்.. அப்படியெல்லாம் இல்லை ராதா, எனக்கு உதவி செய்தாரே என்ற எண்ணத்தில்தான்..." என்று சமாளிக்க முயற்சிக்க, "உன் கண்களே காட்டிக் கொடுக்கிறது யாழ், உன்னையும் ஏமாற்றி என்னையும் ஏமாற்றாதே!" என்று கத்தினாள் ராதா.


சரியாக இவர்களைக் குறுக்கிடுவது போல் யாழ்மொழியைத் தேடி வந்த இந்திரசேனா, "ராதா, எதற்கு இத்தனை கோபம்? இவள் யாரை ஏமாற்றுகிறாள்?" என்று கேட்க, ராதாவோ தன் தோழியைப் பார்த்தாள் என்றால், யாமொழியோ 'சொல்லாதே' என்பது போல் விழிகளால் எச்சரிக்கை செய்தாள்.


"அது... யாழ் அடிக்கடி அரண்மனையிலிருந்து வெளியே செல்கிறாள் அல்லவா! அதைதான் அரசரை ஏமாற்றுகிறாய் என சொல்லி திட்டிக்கொண்டிருந்தேன். வேறொன்றும் இல்லை" என்று ராதா உண்மையை மறைத்து  சமாளிக்க, 'ஊஃப்...' என பெருமூச்சு விட்டுக்கொண்ட யாழ்மொழியோ வராத புன்னகையை  வரவழைத்தவாறு இந்திராவைப் பார்த்தாள்.


"அட! இதற்காகத்தான் திட்டிக்கொண்டிருந்தாயா, என்ன ராதா நீ! அவளை அழைத்துக்கொண்டு செல்வதே நான்தான். யாழ் மீது எந்த தவறும் இல்லை. அவள் ஒன்றும் அறியாதவள், வேண்டுமானால் உன் கோபத்தை என்னிடம் தீர்த்துக்கொள்ளலாம்" என்று இந்திரா குறும்பாக சொல்ல, "அய்யோ இளவரசி, என்ன செல்கிறீர்கள்! தங்ளை திட்டுவதா, அவ்வளவுதான்" என்று பயத்தோடு சொன்னாள் அவள்.


யாழ்மொழிக்கு இந்திராவிடம் தான் செய்யும் காரியங்களை மறைக்கவே ஒரு மாதிரியாக இருந்தது. 


அவளுடைய முகம் இறுகிப் போயிருக்க, இந்திராவோ அதையெல்லாமே கண்டுகொள்ளவில்லை. அவள் பாட்டிற்கு பணிப்பெண்கள் உறங்கும் படுக்கையில் அமர்ந்துக்கொள்ள, மற்ற இரு பெண்களும் பதறிவிட்டனர்.


"இளவரசி, என்ன காரியம் செய்கிறீர்கள்? இந்த அறைக்குள் தாங்கள் வந்ததே அதிர்ச்சி என்றால் இப்படி செய்வது பேரதிர்ச்சியாக அல்லவா இருக்கிறது! இது மட்டும் அரசருக்கு தெரிந்தால் நிச்சயமாக தங்களின் மீது கோபப்படுவார். வேண்டாம் இளவரசி, தயவு செய்து எங்களை சங்கடப்படுத்த வேண்டாம்" என்று யாழ்மொழி பதற்றமாக சொல்ல, இந்திராவோ சலிப்பாக விழிகளை உருட்டினாள்.


"தாங்கள் என் அறைக்கு வரலாம், ஆனால் உங்களின் அறைக்கு நான் வரக் கூடாதா, இது என்ன நியாயம்? பரவாயில்லை இருக்கட்டும், யாழ் நாளை காலை தயாராக இரு, நாம் சந்தைக்கு செல்லலாம்" என்று சத்தமாக பேச்சை ஆரம்பித்து ஹஸ்கி குரலில் நிறுத்த, அவளோ ஓரக்கண்ணால் ராதாவைதான் பார்த்தாள்.


'அவளே செல்லவில்லை என்றாலும் இவர்கள் விட மாட்டார்கள் போலும்!' என்று உள்ளுக்குள் திட்டியவாறு ராதா  அமைதியாக நிற்க, புன்னகையோடு யாழ்மொழி தலையசைத்ததும் அந்த அறையிலிருந்து வெளியேறினாள் இந்திரா.


அவள் சென்றதும் தோழியின் புறம் திரும்பியவள், "ராதா அது... நான்..." என்று ஏதோ சொல்ல வர, அவள் பேசுவதை கை நீட்டி தடுத்த மற்றவள், "நீ வெளியில் செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அந்த வெள்ளையனை காதலிப்பதாக மட்டும் என் எதிரே வந்து  நின்றுவிடாதே! நானே அதை அரசரிடம் கூறிவிடுவேன்" என்று அடக்கப்பட்ட கோபத்தோடு மிரட்டிவிட்டு சென்றுவிட்டாள் மற்றவள்.


அடுத்தநாள் விடிய, இருந்த வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு இந்திராவோடு சந்தைக்கு செல்ல தயாரானாள் யாழ்மொழி.


"யாழ், ரகசிய வழியால் இப்போது செல்ல முடியாது. அரண்மனை வாயிலாலேயே வெளியில் செல்லலாம். யார் அழைத்தாலும் திரும்பி கூட பார்க்காதே! புரிகிறதா?" என்று சொல்லிக்கொண்டே இந்திரா யாழ்மொழியை அழைத்துக்கொண்டு செல்லப் போக, திடீரென அவர்களின் எதிரே வந்து நின்றனர் சில காவலர்கள்.


"இளவரசி, அரசர் தங்களை அழைத்து வரும்படி கட்டளை இட்டிருக்கிறார். தங்களை சந்திக்க இளவரசர் நந்தன் வந்திருப்பதாக தகவல் சொல்லச் சொன்னார்" என்று காவலர்களில் ஒருவன் சொல்ல, முதலில் அதிர்ச்சி பின் யோசனைக்குத் தாவி மௌனமாக நின்றிருந்தாள் இந்திரா.


யாழ்மொழியோ இந்திராவையே பார்த்தபடி நின்றிருக்க, "யாழ், நீ சென்று வீராவை சந்தித்து நடப்பதை சொல்! இன்று இதற்கு நான் ஒரு முடிவை காண வேண்டும்" என்று விட்டு இந்திரசேனா காவலர்களோடு தந்தையை காணச் செல்ல, யாழ்மொழிக்கு அய்யோ என்றிருந்தது.


அரண்மனையிலிருந்து வெளியேறி சந்தையை நோக்கிச் சென்றவள், அங்கிருந்த பழக்கடைக்கு சென்று பழங்களை வாங்குவது போல் வீராவைத் தேட, அவனோ அந்த இடத்திலேயே இருப்பதாகத் தெரியவில்லை.


'என்ன இது, வழமையாக இங்குதானே சுற்றிக்கொண்டிருப்பான். இப்போது ஆளையே காணவில்லையே!' என்று சுற்றி முற்றி தேடியவாறு யாழ்மொழி அந்த சந்தைக்குள் அலைய, அப்போது சரியாக அவளுடைய காதில் விழுந்தது வீராவின் குரல்.


"இப்போ எல்லாம் நம்ம நாட்டோட வளத்து மேல நமக்கே உரிமை இல்லாம போயிரும் போல! அந்த வெள்ளைக்காரனுங்க அதிகமே எல்லாத்தையும் நம்மகிட்ட இருந்து சுரண்டுறானுங்க. இதை விடக் கூடாது. இந்த தடவை அவனுங்களோட இடத்துக்குள்ளயே நுழைஞ்சு ஏதாச்சும் பண்ணணும்" என்று அவன் கத்திக்கொண்டிருக்க, ,"ஆனா வீரா, ஏற்கனவே நம்ம ஆளுங்கள்ல நிறைய பேர் இறந்துட்டாங்க. இந்த நிலைமையில உள்ள போறது எனக்கு சரியா படல. நம்ம எல்லாருக்கும் குடும்பம் இருக்கு" என்று தயக்கமாக சொன்னான் பாலா.


வீராவோ அவனை சில கணங்கள் வெறித்துப் பார்த்தான். 


"யார் என் கூட வர்றீங்களோ இல்லையோ நான் போகத்தான் போறேன். அந்த ஆங்கிலேய உயரதிகாரி லியோ வந்ததுக்கு அப்பறம் இன்னும் எல்லாமே நமக்கு சிரமமாகிட்டு. நாம அமைதியா இருக்கோம்னு அவனுங்க தலைகால் புரியாம ஆடுறானுங்க. என் உயிரே போனாலும் பரவாயில்ல, அவன கொல்ல போறேன். அப்போதான் நம்மள குறைச்சு மதிப்பிட மாட்டாங்க" என்று ஆத்திரத்தில் வீரா வெடிக்க, யாழ்மொழிக்கு சர்வமும் அடங்கிவிட்டது.


"கடவுளே!" என்று அவள் கத்திய கத்தில் வீராவும் அவனோடு இருந்தவர்களும் ஒருசேர குடிசையின் வாயிலை திரும்பிப் பார்த்தனர். 


சந்தேகமாக புருவங்களை நெறித்தவாறு வீரா வேகமாகச் சென்றவன் வாசலில் நின்றிருந்தவளை ஒருகணம் அதிர்ந்துப் பார்த்துவிட்டு பின் உடனே முகபாவனையை மாற்றி புன்னகைக்க, அவளோ அவனை மிரட்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.


"அட, என் இளவரசியோட தூதுப்புறா வந்திருக்கா. ஏதாச்சும் தகவல் சொல்லி அனுப்பினாளா? இல்லன்னா ஒளிஞ்சிருந்து என் கூட விளையாடுறாளா? ஆமா.. இந்திரா எங்க?" என்று அவன் ஆர்வமாகக் கேட்க, "இளவரசி அரண்மனையில் இருக்கிறார்கள். அவர்களை சந்திப்பதற்காக இளவரசர் நந்தன் வந்திருக்கிறார்" என்றாள் யாழ்மொழி உணர்ச்சியற்ற குரலில்.


அதைக் கேட்டதும் வீராவின் முகம் இறுக, "ஓ... அந்த இளவரசர் நந்தனுக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பாரு என் இந்திராவ பார்க்க வந்துட்டே இருக்காரே" என்று கேலியாக சொல்ல, யாழ்மொழியோ எதுவும் பேசவில்லை.


"நீயும் புரட்சியாளர்களில் ஒருவன் என்று எனக்கு இப்போதுதான் தெரியும். ஆனால்..." என்று யாழ் தயக்கமாக இழுக்க, அவனோ புரியாமல் பார்த்தான்.


"என்ன ஆனா?" என்று அவன் கேட்டதும், "யாரையும் காயப்படுத்தக் கூடாது அல்லவா! என்னதான் அவர்கள் நம் நாட்டை கைப்பற்றியிருந்தாலும் நாமும் அவர்களை காயப்படுத்தினால் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்காதே!" என்று தயங்கித் தயங்கி பேசினாள் அவள்.


வீராவோ விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தவன், "அரண்மனையிலயே வளர்ந்த உனக்கு எங்க கஷ்டத்த உணர முடியாது யாழ், உன்னை நான் காயப்படுத்தணும்னு சொல்லல. ஆனா... அந்த வெள்ளைக்காரனுங்க எங்கள அடிமைப்படுத்தி பண்ற கொடுமைகள நீ கண்ணால பார்த்திருக்கியான்னு கூட தெரியல. அமைதியா இருக்க இருக்க எங்கள அடிச்சிட்டே இருக்காங்க. அவனுங்களுக்கு பயம்னா என்னன்னு காமிக்கணும். இதை பத்தி இந்திராகிட்ட சொல்லாத, நமக்குள்ளேயே இருக்கட்டும்" என்று சொல்லி முடித்தான்.


அவனுடைய வார்த்தைகளிலிருந்த வலியை அவள் உணராமல் இல்லை.


எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு அவள் நகர்ந்துச் செல்ல, ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு திரும்பிப் பார்த்தவனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.


அவனுடைய சகாக்களோ அவனைதான் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருக்க, தலையை சொரிந்து அசடுவழிந்தவாறு வீரா குடிசைக்குள் நுழைந்தான் என்றால், வீரா பேசியதையே யோசித்தவாறு சென்றுக்கொண்டிருந்தவளின் பின்னால் ஹார்ன் சத்தம் கேட்டது.


உடனே மொத்த சிந்தனையும் கலைய யாழ்மொழி திரும்பிப் பார்க்க, அவளை மோதுவது போல் ஆங்கிலேயர்களின் கார் அவளை நோக்கி வரவும் பயத்தில் விழிகளை மூடிக்கொண்டாள் அவள்.


**********

என்னோட மற்ற கதைகளை படிக்க 👇 (kobo app)

India link >>

https://www.kobo.com/in/en/search?query=sheha+zaki&ac=1&acp=sheha+zaki&ac.author=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta


Usa link >>>

https://www.kobo.com/ww/en/search?query=sheha+zaki&ac=1&acp=sheha+zaki&ac.author=sheha+zaki&sort=Temperature&fclanguages=ta


'காலமெல்லாம் உன்னைத் தேடி' என்னோட டிரெக்ட் புக் இப்போ அமேசன் கிண்டல்ல yazhini mithra அப்படிங்குறா Available ஆ இருக்கு.. மறக்காம ரீட் பண்ணிக்கோங்க.. >>>

India link 👇

https://www.amazon.in/dp/B0FLYRBNZG


Usa link 👇

https://www.amazon.com/dp/B0FLYRBNZG


என்ட், மையவிழிப் பார்வையிலே நாவலும் இப்போ Agni tamil novels அப்படிங்குற பேருல Available ஆ இருக்கு... >>>

INDIA link👇

https://www.amazon.in/dp/B0FL2S9LYC


USA link 👇

https://www.amazon.com/dp/B0FL2S9LYC





Comments

Popular posts

முடிவடைந்த நாவல்கள் ✍🏻📚